அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து தற்போது விடுவிக்கப்பட்ட வளலாய் பிரதேசத்தில் உள்ள அமெரிக்கன் மிஷன் கலவன் பாடசாலை 20 வருடங்களின் பின்னர் இன்று வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராஜாவினால் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளே 21 மாணவர்கள் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமையால் வளலாய் மக்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.யுத்தம் காரணமாக 1990 ம் ஆண்டு வளலாய் மக்கள் இடம்பெயர்ந்ததை அடுத்து இப்பாடசாலை ஆவரங்கால் மகாஜன பாடசாலையுடன் இணைத்து கல்வி செயற்பாட்டை முன்னெடுத்தது.அதன் பின்னர் 1995 ம் ஆண்டு இடப்பெயர்வினை அடுத்து பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டது. 96 ம் ஆண்டு மீள குடியமர அனுமதிக்கப்பட்ட போது பாடசாலை முற்றாக சேதமடைந்து காணப்பட்டது.
யுத்தம் முடிவடைந்ததை அடுத்து 2010 ஆண்டு முதல் இப்பாடசாலையை மீள ஆரம்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பிரகாரம் இன்றைய தினம் இப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலை கட்டடம் முற்றாக சேதமடைந்து காணப்படுவதனால் தற்போது பாடசாலை வளலாய் முற்போக்கு மண்டபத்திலேயே இயங்க ஆரம்பித்து உள்ளது. பாடசாலையை சொந்த இடத்தில் மீள கட்டி முடிப்பதற்கு 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன் பணிகள் முடிவடையும் வரை பாடசாலை வளலாய் முற்போக்கு மண்டபத்திலையே தொடர்ந்து இயங்கவுள்ளது. தற்போது இப் பாடசாலையில் 1- 5 வரையான வகுப்புக்கள் நடைபெறவுள்ளன.
|